search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் நல வாழ்வு முகாம்"

    சமயபுரம் கோவில் பாகனை கொன்ற யானை மசினி முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர். #Masini
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் இருந்த 12 வயது பெண் யானை மசினி திருச்சி சமயபுரம் கோவிலுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த மசினி சமயபுரம் கோவிலில் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டதால் அதீத சத்தம் மற்றும் கூட்டத்தை பார்த்து அடிக்கடி மிரண்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை பராமரித்து வந்த பாகன் ராஜேந்திரனை மிதித்து கொன்றது.

    இதனால் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களால் யானையை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. மேலும் யானைக்கு நோய் தொற்று இருந்தது.

    இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் முழுமையாக குணம் அடையவில்லை. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மசினி யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து லாரியில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. அங்கு யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து முதுமலை கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர்.

    மசினியை முன்பு முதுமலையில் பராமரித்து வந்த பாகன் பொம்மன் யானை மீண்டும் இங்கு வந்ததால் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.

    நீண்ட நாட்கள் ஆனாலும் தன்னை மசினி அடையாளம் கண்டு கொண்டதாக வியப்புடன் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, 2006-ம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்தில் 3 மாத குட்டியாக மசினி கண்டெடுக்கப்பட்டு தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

    9 ஆண்டுகள் யானைகள் முகாமில் எனது பராமரிப்பில் மசினி வளர்ந்தது. மிகவும் அமைதியாக, சொன்ன பேச்சை தட்டாமல் வளர்ந்தது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பி உள்ளது. இனி இங்கேயே நிரந்தரமாக மசினி தங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    முதுமலையில் மாலையில் குளிர் வாட்டுவதால் மசினி யானை ஒரு கொட்டகையில் வைத்து பாராமரிக்கப்படும் என வனசரகர் தயானந்த் கூறினார்.  #Masini
    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 11-வது ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    தொடக்க நாளையொட்டி இன்று முகாம் முன் வாழை மரம் கட்டப்பட்டு இருந்தது. முகாம் முழுவதும் தென்னங்குருத்துகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையிலே பாகன்கள் தங்கள் யானைகளை அங்குள்ள குளியல் மேடை, ‌ஷவருக்கு அழைத்து சென்று குளிக்க வைத்தனர்.

    பின்னர் அந்தந்த கோவில்களின் அடையாளம் யானைகளின் நெற்றியில் இடப்பட்டது. இதனை தொடர்ந்து நெற்றி பட்டம் சூடி, யானை உடலில் அலங்கார துணி அணிவிக்கப்பட்டது.



    அதன் பின்னர் 27 யானைகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆப்பிள், அன்னாசி, கரும்பு, தர்பூசணி, உருண்டை வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

    6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம் பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு தனித்தனியாக மருத்துவ கொட்டகைகள். யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3/4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை ‌ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முகாமைச்சுற்றிலும் வனப்பகுதியையொட்டி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் முகாமிற்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதைத்தடுக்க முகாமைச்சுற்றிலும் 1 1/2கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரிய மின்வேலி தொங்கு மின்வேலிகள் சீரியல் பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் ஒளிவிட்டுப்பிரகாசிக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதையும் மீறி காட்டு யானைகள் வர முயன்றால் அதனை விரட்ட பட்டாசுகளுடன் வன ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். முகாமுக்கு யானைகள் வரும் வழியில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

    முகாம் ஒருங்கிணைப்பாளரும் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான ராஜமாணிக்கம் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர்கள் ராமு, நந்தகுமார், உதவி கோட்ட பொறியாளர் பிரேம்குமார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் முகாமுக்கு வந்த யானைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை தலைமை இடத்து இணை ஆணையர் ஹரிப்பிரியா, சட்டம் இணை ஆணையர் அசோக் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.  #Elephants #Rejuvenationcamp

    மேட்டுப்பாளையத்தில் நாளை தொடங்கும் நல வாழ்வு முகாமிற்கு யானைகள் வரத் தொடங்கியது. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்ப காட்டில் 4 ஆண்டுகள் யானைகள் நல வாழ்வு முகாமும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்படி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் இந்த முகாம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு 11-வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்தது.

    முகாம் அலுவலகம், சமையல் கூடம், யானை பாகன்கள் தங்கும் இடம், ஓய்வறை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, குளியல் மேடை, ‌ஷவர் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் கண்காணிக்க 8 கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரிய மின்வேலி, தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். முகாமில் பங்கேற்பதற்காக அந்தந்த ஊர்களில் இருந்து கோவில் யானைகள் நேற்றே மேட்டுப்பாளையம் புறப்பட்டது.

    இன்று காலை 7 மணிக்கு முதல் முதலாக மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை வந்து சேர்ந்தது.

    அதனை தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில் யானை பூமா ஆகியவை வந்து சேர்ந்தது. காலை 9 மணி வரை 10 யானைகள் முகாமிற்கு வந்தது.

    முகாமிற்கு வரும் யானைகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு வசதியாக வனபத்ரகாளியம்மன் கோவில் பின்புற வளாகத்தில் சாய்வு மண் திட்டு அமைக்கப்பட்டு இருந்தது.

    அங்கு யானைகள் இறக்கப்பட்டது. பின்னர் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு யானைகள் அழைத்து வரப்பட்டது. அங்கிருந்த கொடி மரம் முன் நின்ற யானைகள் துதிக்கையை தூக்கி அம்மனை வணங்கியது.

    மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை முகாமில் உள்ள ‌ஷவரில் குளித்து மகிழும் காட்சி.

    பின்னர் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு பசுந்தீவனம் அளிக்கப்பட்டது. யானைகள் நீண்ட தூரம் லாரியில் பயணம் செய்து வந்ததால் களைப்பு தீர அங்குள்ள ‌ஷவரில் குளியில் போட்டது.

    பின்னர் யானைகள் ஓய்வு எடுக்க தொடங்கியது.  #Elephants #Rejuvenationcamp
    ×